அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் முடிகொண்டான் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இக்கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கோரிக்கை விளக்க கூட்டத்தில் முடிகொண்டான் கிராமத்தில் 100 வேலைத் திட்டத்தை முழுமையாக வழங்க வேண்டும். திருவையாறிலிருந்து முடிகொண்டான் வழியாக வெங்கனூர், ஆங்கியனூர், கல்லகத்துக்கு புதிய வழித்தடத்தில் அரசு நகர பேருந்து இயக்க வேண்டும். பாசன வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் கிளைச் செயலர் கணேசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் புனிதன், மாவட்ட குழு உறுப்பினர் சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் மணியன் , மாநில குழு உறுப்பினர் சின்னதுரை ஆகியோர் பங்கேற்று பேசினர்.