உடையார்பாளையம் அருகே கோயில் வாசலில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.
உடையார்பாளையம் அருகேயுள்ள ஆதிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன்(52). இவர், வெண்மான்கொண்டான் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருவிழாவுக்கு சென்றிருந்தார். அங்கு கோயில் வாசலில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் வந்து பார்த்த போது நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து கணேசன் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.