பிரதமரின் விவசாயிகள் ஒய்வூதிய திட்டத்தில் சேர விருப்பமுள்ள விவசாயிகள் அருகிலுள்ள பொது சேவை மையத்தை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் 18 முதல் 40 வயது வரை உள்ள ஆண், பெண் விவசாயிகள் சேருவதற்கு தகுதியனாவர்கள். மேலும் ஒரு விவசாயி தங்களின் வயதுக்குகேற்ப ரூ.55 முதல் ரூ.200 வரை பங்குத் தொகையாக 60 வயது வரை செலுத்த வேண்டும். இதற்கு இணையான தொகை மத்திய அரசால் செலுத்தப்படும். 61 வயது முதல் வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியமாக பெற்றுக் கொள்ளலாம்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் பயன்பெறும் சிறு, குறு விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் பெறப்படும் நிதியிலிருந்து இத்திட்டத்திற்கு தாங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையினை தங்களது விருப்பத்தின்படி செலுத்திக் கொள்ளலாம். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் ஓய்வூதியத்திட்டத்தில் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது. விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் அருகில் உள்ள பொதுசேவை மையத்தை நேரில் அணுகி, பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்ட அட்டை பெற்றுக் கொள்ளலாம்.