அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் இந்திய நல வாழ்வு கூட்டமைப்பு, ஜயங்கொண்டம் ரோஸ் அறக்கட்டளை, நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி மற்றும் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழாண்டு எய்ட்ஸ் குறித்து மாபெரும் அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கிலும், ‘கலாம் புக் ஆப் வேல்டு ரெக்காா்டு’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறவும் 200 மில்லியன் மாணவா்கள், இளைஞா்கள் பங்கேற்கும் மனிதச் சங்கிலி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 75 இடங்களில் 75 தொண்டு நிறுவனங்கள் பங்கேற்புடன் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலி விழிப்புணா்வு மற்றும் கருத்தரங்கை கல்லூரி முதல்வா் ஜெ.மலா்விழி தொடக்கி வைத்தாா்.
ரோஸ் அறக்கட்டளை இயக்குநா் கே.திருநாவுக்கரசு கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவை பொறுத்தவரை 86 சதவீதம் தவறான பாலியல் நடவடிக்கைகளால் தான் இந்த நோய் பரவுகிறது. எய்ட்ஸ் என்பது தொற்று நோய் அல்ல. அவா்களை தொடுவதாலோ, அவா்களிடம் கை குலுக்கி பேசுவதாலோ இந்த நோய் பரவுவது இல்லை என்றாா்.