அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கார் மோதியதில் கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். ஜயங்கொண்டம் அருகிலுள்ள கோரியம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த காசிநாதன் மகன் வேல்முருகன் (19). இவர், பெரம்பலூரிலுள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டயப்படிப்பு படித்து வருகிறார்.
இவரது நண்பர் எளம்பலூர் கே.கே.நகரைச் சேர்ந்தவர் அ. அருண் பிரகாஷ் (19).ஞாயிற்றுக்கிழமை காலை வேல்முருகன் தனது மோட்டார் சைக்கிளிலும், அருண்பிரகாஷ், தனது நண்பர் செ.தினேசுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அணைக்கரைக்குச் சென்று மீன் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
சென்னை-குடந்தை தேசிய நெடுஞ்சாலையில் குழவடையான் கிராமத்தில் வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் அருண்பிரகாஷ், தினேஷ் காயமடைந்தனர். இவர்களில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அருண் பிரகாஷ் உயிரிழந்தார். தினேஷ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் வேலுச்சாமி வழக்குப்பதிந்து, கார் ஓட்டுநரான கடலூர் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த குமாரகிருஷ்ணனைத் தேடி வருகின்றனர்.