அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே திங்கள்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த 37 பேரில் 2 பெண்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டம், குந்தபுரத்தைச் சேர்ந்த 37 பேர் கீழப்பழுவூர் அருகிலுள்ள வைப்பம் கிராமத்தில் துக்க நிகழ்வுக்கு சுமை ஆட்டோவில் திங்கள்கிழமை சென்றனர்.கீழப்பழுவூர் அருகே ஜயங்கொண்டம் சாலையில் எதிர்பாராதவிதமாக சுமை ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோவிலிருந்த 37 பேரும் காயமடைந்தனர்.
இவர்களில் இளஞ்சியம் (52),சிவமாலை (50) தனச்செல்வி(50), நீலாவதி(55), கமலா(59) உட்பட 6 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறுகின்றனர். மற்ற 31 பேர் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளஞ்சியம்,சிவமாலை ஆகிய 2 பெண்கள் அங்கு கிசிசை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். கீழப்பழுவூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.