மாணவர்கள் தங்களது தகுதி, திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி. சுமதி.
அரியலூர் பத்மஸ்ரீ வித்யாலயா பள்ளி மற்றும் பிளாசம் இன்டர்நேஷனல் பள்ளியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
மாணவர்கள் உயர்ந்த சிந்தனையுடனும், ஒழுக்கத்துடனும், மற்றவர்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். மாணவ, மாணவிகள் எப்போதும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் அறிவும், ஒழுக்கமும் இரு கண்கள் போன்றவை.
நமது நாட்டைச் சேர்ந்த பலர் உலகளவில் சாதனை படைத்து வருகின்றனர். நமது நாட்டு மாணவர்களுக்கு சர்வதேச அளவில் போட்டியிடும் தகுதியும், திறமையும் அதிகமாகவே இருக்கிறது.
அத்தகைய தகுதி ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும். மாணவ,மாணவிகள கடின உழைப்புடனும், விடாமுயற்சியுடனும், பணிவுடனும், ஒழுக்கத்துடன் செயல்பட்டால் வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம் என்றார் அவர். பின்னர் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார்,அரியலூர் கல்வி மாவட்டக் அலுவலர் அரி. செல்வராஜ் , பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, ராஜேஷ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் ராஜேஷ், ஆர்ஆர் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ரேவதி உள்ளிட்டோர் பேசினர்.
பள்ளி நிர்வாகி பத்மபிரியா வரவேற்றார். பள்ளி நிர்வாகி வாணிசிவம் நன்றி தெரிவித்தார்.