அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே பழுதடைந்த மின்மாற்றியைச் சீர் செய்யக் கோரி மழவராயநல்லூர் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள கீழநத்தம் ஊராட்சிக்குட்பட்டது மழவராயநல்லூர் கிராமம். இங்கு மேற்கு தெருவிலுள்ள மின்மாற்றி கடந்த 16 ஆம் தேதி பழுதடைந்ததால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மின்சாரமின்றி அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் கடம்பூர்-விக்கிரமங்கலம் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கோவிந்தசாமி,மணவாளன் மற்றும் போலீஸார், ஊராட்சி செயலர் முருகானந்தம் ஆகியோர் வந்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் கடம்பூர்-விக்கிரமங்கலம் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.