அரியலூர் மாவட்டத்தின் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கும் பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதியுதவித் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், ஆட்சியர் மு.விஜயலட்சுமி ஆகியோர் நிதியுதவித் திட்ட ஆணைகளை வழங்கினர்.
பின்னர் இதுகுறித்து அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் தெரிவித்தது:
இந்த திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு விவசாய குடும்பத்திற்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை சம தவணைகளில் ஒரு தவணைக்கு ரூ.2,000 வீதம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் இரண்டு ஹெக்டேர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து 90,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றில் முதல் தவணையாக 45,518 விவசாயிகளுக்கு, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்றார் அவர். முன்னதாக பல்வேறு துறைகள் சார்பில் வேளாண் இடுபொருட்கள் மற்றும் இயந்திரங்களின் கண்காட்சியினை பார்வையிட்டார்.
ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜ், வேளாண் இணை இயக்குநர் (பொ) பழனிசாமி, தோட்டக்க லைத்துறை துணை இயக்குநர் அன்புராஜன்,வேளாண் செயற்பொறியாளர் நாகநாதன், கோட்டாட்சியர்கள் அரியலூர் சத்தியநாராயணன்,உடையார்பாளையம் ஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.