அரியலூர் அரசுக் கலைக் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியில் 3000-த்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் பயின்று வருகின்றனர். கடந்தாண்டைப் போன்று நிகழாண்டிலும் பொங்கல் விழாவைக் கொண்டாட முடிவு செய்த கல்லூரி நிர்வாகம் அனுமதியளித்தது. அதன்படி, இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள், பேராசிரிய, பேராசிரியைகளுடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மாணவர்கள் வேட்டிகளுடனும், மாணவிகள் சேலை அணிந்தும் கல்லூரி பொங்கல் விழாவைக் கொண்டாடினர். புதுப்பானையில் மஞ்சள் கொத்து, செங்கரும்பு உள்ளிட்ட பொருள்களை வைத்து பொங்கலிட்டு சூரியபகவானை வழிபட்டனர். முன்னதாக, மாணவிகள் ரங்கோலி, கம்பிக் கோலம், பூக்கோலம், பொங்கல் கோலம், விளக்குக் கோலம் உள்ளிட்ட கோலங்களை வரைந்திருந்தனர்.
சுற்றுலாத்துறை, கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில்,மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவுக்கு அக்கல்லூரி முதல்வர் பெ.பழனிசாமி தலைமை வகித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலரும், இயற்பியல் துறை பேராசிரியருமான கருணாகரன்,பேராசிரியர் ராசமூர்த்தி,நாட்டு நலப் பணித்திட்ட அலகு-3 அலுவலர் பி.செல்வமணி உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர்.