அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி பதிவறை பெண் எழுத்தர் வெள்ளிக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
ஜயங்கொண்டம் நகராட்சிப் பதிவறை எழுத்தராகப் பணியாற்றி வருபவர் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சின்னத்துரை மனைவி லட்சுமி (41). இவர் வெள்ளிக்கிழமை காலை வரிவசூல் செய்துவிட்டு, பிற்பகலில் அலுவலகப் பணியை மேற்கொண்டிருந்தார்.
அப்போது, வேலைகளை சரிவர செய்யவில்லை எனக் கூறி இவருக்கு நகராட்சியின் மேலாளராகப் பணியாற்றி வரும் பார்த்திபன், மெமோ கொடுத்தாராம். இதனால் விரக்தியடைந்த லட்சுமி, அலுவலகத்தின் மேல் பகுதியிலுள்ள அறைக்குச் சென்று, கதவை வேகமாக சாத்தி சப்தமிட்டுள்ளார்.
இதையறிந்த ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, லட்சுமி அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஜயங்கொண்டம் போலீஸார் நகராட்சி அலுவலகம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றி வரும் பார்த்திபன், இங்குப் பணியாற்றி வரும் 10-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை வழங்கி வந்ததாகவும், அவர்கள் இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பெண் எழுத்தர் தற்கொலைக்கு முயன்றது ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.