அரியலூரில் ஜன.25 ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று பேசுகிறார் என்றார் பொருளாளர் எம். ரெங்கசாமி.
வீரவணக்க நாள் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகளைத் திங்கள்கிழமை தொடக்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தலைமைச் செயலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் யாகம் நடத்தியிருப்பது முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் வேண்டுதலுக்காகத்தான்.
கர்நாடக சிறையிலுள்ள சசிகலாவுக்கு சட்டத்துக்குள்பட்டு குறைந்தபட்ச சலுகைகள் அளிக்க வேண்டுமோ அந்த சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன . ஆனால் சிறையில், அவர் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது உண்மை தான் என்று அளிக்கப்பட்ட அறிக்கைக்கு பின்னால் மத்திய பாஜக அரசு உள்ளது.
அறிக்கையில் கூறியுள்ளவாறு சலுகைகள் வழங்கப்பட்டதா என்பதை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில், சசிகலாவை குற்றம்சாட்ட முடியாது. நாட்டில் சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெறும் ஆட்சி பா.ஜ.க. ஆட்சிதான் என்றார் ரெங்கசாமி.
இந்த நிகழ்வில், கட்சியின் அமைப்புச் செயலரும், முன்னாள் தலைமைக் கொறடாவுமான ஆர். மனோகரன், மாவட்டச் செயலர் துரை.மணிவேல், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பாளை அமரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.