அரியலூர் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனுடய குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் அளவீட்டு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தொடக்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கூடுதல் உதவி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகுமார், ரெங்கமணி, அரியலூர் மற்றும் செந்துறை வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் செல்வராணி, குணசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணகி, கலாமாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியத்தில் இருந்து மாற்றுத்திறன் கொண்ட 78 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் மனவளர்ச்சி குன்றியோருக்கான உபகரணங்கள் 30 மாணவர்களுக்கும் , மூன்று சக்கர வண்டி 1 மாணவருக்கும், சக்கர நாற்காலி 5 மாணவர்களுக்கும், நடைப்பயிற்சி சாதனம் 15 மாணவர்களுக்கும், காதொலிக் கருவி 1 மாணவருக்கும், முடநீக்கு நாற்காலி 4 மாணவர்களுக்கும், முடநீக்கு சாதனம் 21 மாணவர்களுக்கும், செயற்கைக் கால் 1 மாணவருக்கும் என 78 உபகரணங்கள் அளவிடப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இடைநிலைக் கல்வித் திட்ட சிறப்பாசிரியர்கள் எட்வின் லாசர், சார்லஸ், அலிம்கோ நிறுவன அளவீட்டு அலுவலர்கள் வினித்குமார், மோகன் யாதவ், அரியலூர், செந்துறை சிறப்பாசிரியர்கள் மற்றும் முடநீக்கியல் மருத்துவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.