திமுக கூட்டணிக்கு பா.ம.க.தலைவர் ராமதாஸ் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்.
சிதம்பரம் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிட்டு வென்றமைக்காக, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் அரியலூர் அண்ணாசிலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று தொல். திருமாவளவன் மேலும் பேசியது:
பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் நெஞ்சத்தில் இன்றும் நான் இருக்கிறேன். அவரிடம் தனியாக சென்று என்னைப் பற்றி கேட்டால் நல்லவர் என்றே சொல்லுவார். தேர்தல் வாக்குக்காக என் மீது அபாண்டமாக பழியை அவர் சுமத்தினார்.
அரசியலுக்கு இதுபோலத்தான் நாங்கள் பேசியாக வேண்டும். வேறு என்ன வழி இருக்கிறது. அதனால் தான் இவ்வாறு பேசுகிறேன் என தனிப்பட்ட முறையில் நிச்சயம் கூறுவார். கண்டிப்பாக திமுக கூட்டணிக்கு ராமதாஸ் வரப்போகிறார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என் மீது பரப்பப்பட்ட அவதூறுகள் அனைத்தும் ஓட்டுக்காக பரப்பப்பட்டன என்பது வெற்றியின் மூலம் மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு தொகுதி அரசியலைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் ஜாதியின் பெயரால் விமர்சனம் வந்தது என்றால் அது சிதம்பரம் மக்களவைத் தொகுதி மட்டுமே என்றார்.
கூட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்தார். மதிமுக மாவட்டச் செயலர் கு.சின்னப்பா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.