அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகிலுள்ள பெருமாள் தீயனூர் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியர் டி.ஜி. வினயிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
பெருமாள் தீயனூர் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால், இதனை சுற்றியுள்ள பெருமாள் தீயனூர், உடையவர் தீயனூர்,செங்குழி,மலைமேடு,பட்டகட்டான் குறிச்சி, அம்பலர்கட்டளை, விக்கிரமங்கலம்,அம்பாபூர் உள்ளிட்ட கிராம மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் அவ்வழியே செல்லமுடியவில்லை. எனவே உடனடியாக மதுக்கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும்.
சமூக ஆர்வலர் சோழன்குடிக்காடு கணேசன்: ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் அரியலூர் பேருந்து நிலையத்தில் குடிக்க தண்ணீர் கிடையாது,இலவச கழிவறை கிடையாது, இரவு நேரங்களில் போதுமான மின்விளக்குகள் கிடையாது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.எனவே மாவட்ட ஆட்சியர் பேருந்து நிலையத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும்.
செந்துறை வட்ட ரயில் பயணிகள் மற்றும் பேருந்து பயணிகள் நலச் சங்கம்:
செந்துறை ரயில் நிலையத்தில் வைகை,பல்லவன் போன்ற அதிவேக ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்ட சென்னை-ராமேஸ்வரம் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.