அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேரைப் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 55 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
ஆண்டிமடம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணித்துவந்தனர். இந்நிலையில், போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து ஆண்டிமடத்தைத் சேர்ந்த கார்த்திக் (33), மேலநெடுவாய் சுப்பிரமணியன் (42) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், இவர்களின் நண்பர்களான வரதராஜன்பேட்டை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த எடிசன் இருதயராஜ்(28), கடலூர் மாவட்டம், கொழை கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் ஸ்டீபன் (42) ஆகியோரும் சேர்ந்து ஆண்டிமடம் பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 55 பவுன் தங்கநகைகளைப் பறிமுதல் செய்தனர்.