அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே சுமை ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், ராயந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகன் அருண்குமார்(23). சுமை ஆட்டோ ஓட்டுநர். திங்கள்கிழமை நள்ளிரவு இவர், விளாங்குடியில் தண்ணீர் கேன்களை இறக்கி விட்டு, அங்கிருந்து வி.கைகாட்டிக்கு சுமை ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.
விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது எதிரே அரியலூர் மின் நகரைச் ஆறுமுகன் மகன் கணேசன்(56) என்பவர் ஓட்டி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, சுமை ஆட்டோ மீது மோதியது.
இதில் சுமை ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.