அரியலூர் வட்டம், தேளூர் கிராமத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் பெறும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் க.பூவலிங்கம் தலைமை வகித்து பேசியது:
சொட்டுநீர் பாசனம் அமைப்பதன் மூலம் பயிருக்கு தேவையான பாசன நீர் அறிவியல் ரீதியாக கணக்கிடப்பட்டு போதிய அளவு மட்டுமே அளிக்கப்படுகிறது.
வேர் பகுதியில் மட்டுமே நீர் பாய்வதால் பாசனநீர் வீணாகாமல் பயன்படுத்தப்படுகிறது. மழையில்லா நேரங்களில் நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் பகுதிகளுக்கு இது மிகச் சிறந்த பாசன முறையாகக் கருதப்படுகிறது. மேலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை (மானியத்தில்) விவசாயிகளே தேர்ந்தெடுக்கலாம்.
எனவே வேளாண் உற்பத்திக்கு அடிப்படை காரணியான பாசன நீரை சேமித்து நீடித்த நிலையான பயிர் சாகுபடி செய்வதுடன், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் மற்றும் மழைத்தூவாண் போன்ற சிறந்த நுண்ணீர் பாசன முறைகளைக் கடைப்பிடித்து உற்பத்தி திறனை அதிகரித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். மேலும் கரும்பு விவசாயிகள் சொட்டுநீர் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம். இந்தத் திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார்கார்டு, குடும்பஅட்டை, சிறு- குறு விவசாயி சான்று, நில வரைபடம் , இரண்டு புகைப்படத்துடன் அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.