மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அக்கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
விழாவுக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை வகித்து, 90 கர்ப்பிணி பெண்களுக்கு சோப்பு, பவுடர், காப்பு, வளையல், துணிகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கிப் பேசினார்.
கிழக்கு ஒன்றியச் செயலர் கென்னடி, மேற்கு ஒன்றியச் செயலர் அசோக சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன், கர்ப்பிணி பெண்கள், சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜான் வின்சென்ட் ராஜா வரவேற்றார்.