அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 83 பயனாளிகளுக்கு ரூ. 6 லட்சத்து 9 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமை வகித்து, வருவாய்த் துறை சார்பில் 33 பேருக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, மனைவரி பட்டா, நத்தம் பட்டா மாற்றம், நிலப்பட்டா மாற்றம் மற்றும் மனைவரிப்பட்டா நகல்களுக்கான ஆணைகளையும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 20 பேருக்கு ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் இறப்பு சான்றிதழ், மாவட்ட வழங்கல் துறை சார்பில் 10 பேருக்கு புதிய குடும்ப அட்டை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 15 பேருக்கு ரூ.78 ஆயிரத்து 750 மதிப்பில் இலவச தையல் இயந்திரம், சுகாதாரத் துறை சார்பில் 5 கர்ப்பிணிகளுக்கு ரூ.10 ஆயிரத்தில் சத்துணவு பெட்டகங்கள் என மொத்தம் 83 பேருக்கு ரூ. 6 லட்சத்து 9 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் மக்கள் தொடர்பு முகாமில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களிலிருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இதைப் பொதுமக்கள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு. சுந்தரராஜன்,சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வீ.சி. ஹேசமந்த்காந்தி, உடையார்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் (பொ) முருகன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் க. பழனிசாமி,
கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், அனைத்துத் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.