பத்ம ஸ்ரீ விருது பெற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் ஜூன் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயகுமார்ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில், இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க, அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஜூன் 20ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஆட்சியரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பப்படும்.