அரியலூர் : அரியலூர் மாவட்டம், திருமழபாடி அருகே கோவில்எசனை கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றுத்தடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் திருவீதியுலா நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதி மக்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து, மாவிளக்கு போட்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 40 அடி உயரமுள்ள தேரில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழாவில், கலந்து கொண்ட திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். செவ்வாய்க்கிழமை காலை முளைபாரி மற்றும் காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.