அனலாக் முறையில் கேபிள்டிவி ஒளிபரப்பை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிராய் விதிமுறைகளின்படி, பிப்.1 ஆம் தேதி முதல் சேனலைத் தேர்வு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களை அணுகி படிவங்களை பூர்த்தி செய்து பயனடையலாம்.
அனலாக் சிஸ்டம் நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கேபிள் டிவி ஒழுங்குமுறைச்சட்டத்தின் படி உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனலாக் சிக்னலை முற்றிலும் தவிர்த்து டிஜிட்டல் சிக்னலாக மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும். இவ்வாறு வழங்காமல் விதிகளை மீறும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.1,000- அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். எனவே, மாவட்டத்தில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அனைவரும் டிஜிட்டல் முறையில் மட்டுமே கேபிள் டிவி ஒளிபரப்பைத் தொடர வேண்டும்.