மாணவர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டாலே அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படும் என்றார் அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளின் கூடுதல் இயக்குநர் ச. முத்தன்.
அரியலூர் மாவட்டம் விளாங்குடி அருகேயுள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற 11 ஆவது ஆண்டு விழாவில் அவர் பங்கேற்று மேலும் பேசியது:
மாணவர்கள் நமது வாழ்க்கையை இன்னும் எவ்வாறு சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். அதற்கு பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு இருக்கும் திறமை மீது நம்பிக்கை வைத்து, மற்றொரு நல்ல வழியைப் பின்பற்றி, லட்சியத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.
தோல்விதான் நமக்குள் இருக்கும் திறனை வெளிப்படுத்த உந்தித்தள்ளும் கருவி என்பதை உணருங்கள். பலருக்கும் நீங்கள் முன்னுதாரணமாக இருக்கலாமே தவிர, தவறான முன்னுதாரணமாக ஆகிவிடாக்கூடாது. நேர்மையான வாழ்க்கை தான் பல வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார் அவர். தொடர்ந்து அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். இதையடுத்து, கவிஞர் நந்தலாலா பேசியது: மாணவர்களின் வெற்றி, அவர்களின் சுய ஒழுக்கத்தை பொறுத்தே அமையும் என்றார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார்.
முன்னதாக விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு அகில இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ம.போஸ் கலந்து கொண்டு , மாணவர்களின் விளையாட்டு திறன்களே அவர்களை மற்ற துறைகளில் சாதிக்க வழிவகுக்கும் என்று தெரிவித்தார். பின்னர் அவர் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார்.