அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அரசுப் பேருந்து நடத்துநர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு போலீஸார் கைது செய்தனர்.
செந்துறை அருகேயுள்ள இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் குமரவேலை, விருத்தாசலம் அருகேயுள்ள புதுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை(65) கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்து, செந்துறை அடுத்த பெரியாக்குறிச்சி கிராமத்தின் அருகேயுள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கம் பகுதியில் வீசிச்சென்றார். சந்தேகத்தின்பேரில் போலீஸார் ஏழுமலையை விசாரித்ததில் இந்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வந்தனர். விசாரணையில், தனது மகள் இறப்புக்கு காரணமாக இருந்த குமரவேலை, ஏழுமலை மதுவாங்கி கொடுத்து, கொலை செய்ததும், அதற்கு உடந்தையாக ஏழுமலையின் மனைவி வசந்தி(60), மருமகன் சண்முகம்(55) ஆகியோர் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் மேற்குறிப்பிட்ட இருவரையும் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.