அரியலூர் மாவட்ட திமுக செயலர் வீட்டில் 5 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆண்டிமடத்தில் திமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எஸ்.எஸ்.சிவசங்கரின் வீடு உள்ளது. இவருடைய தந்தை முன்னாள் எம்.பி., சிவ.சுப்பிரமணியன் ஆவார்.இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்பொழுது அரியலூரில் உள்ளார். வெள்ளிக்கிழமை ஆண்டிமடத்திலுள்ள சிவசங்கரின் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டில் சென்று பார்த்தபோது, வீட்டினுள் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருள்கள், ரூ. 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில், ஆண்டிமடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.