அரியலூர் அருகே இளம்பெண் மரணம் குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
உடையார்பாளையம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி அன்புதர்ஷினி(25). இவர்களுக்கு 1 வயதில் துளசி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அன்புதர்ஷினி அரியலூரில் வாடகை வீடு எடுத்து தங்கி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
கோடை விடுமுறை என்பதால் சொந்த ஊரான சுத்தமல்லியில் குடும்பத்துடன் வந்திருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் மர்மமான முறையில் அன்புதர்ஷினி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த உடையார்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக தாய் மணிமேகலை போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.