திருமணம் முடிந்த கையோடு கிராமம் முழுவதும் 80 மரக்கன்றுகளை நட்டு வைத்த மணமக்களை கிராம மக்கள் பாராட்டினர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குமிழியம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்பாபு(29). இவர், கடந்த 2017 முதல் மரங்களின் நண்பர்கள் என்ற ஒரு அமைப்பை 32 நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கி நடத்தி வருகிறார். கிராமத்தில் பல இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ள இவர்கள் தொடர்ந்து பராமரித்தும், புதிய மரக்கன்றுகளை நட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்ட அருண்பாபு, தனது மனைவி பிரியாவுடன், குமிழியம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை, சாலையோரங்கள் என பல்வேறு இடங்களில் நிழல் தரும் 80 மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இதற்காக, ஜேசிபி மூலம் குழி எடுப்பது, மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வலை வாங்குவது உள்ளிட்டவற்றிக்காக ரூ.30 ஆயிரம் செலவு செய்துள்ளார். பொய்யாத நல்லூரில் உள்ள சோலைவனம் என்ற நாற்றுப்பண்ணை இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியுள்ளது.இவரது செயலை அக்கிராம மக்கள் பெரிதும் பாராட்டினர். மணமக்களுடன் கிராம இளைஞர்களும் சேர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.