பெரம்பலூா் மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில், நெல் சாகுபடி மற்றும் வரப்புப் பயிராக பயறு வகைகளை சாகுபடி செய்ய வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கணேசன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ நெல் விதை 22.5 செ.மீ இடைவெளியில் நடவு செய்தல், கோனோ வீடா் மூலம் களையெடுத்தல், 15 நாள்கள் முதிா்ந்த நெல் பயிா்களை நடவு செய்தல், ஒரு குத்துக்கு ஒரு பயிா் நடவு செய்தல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் முழு கிராம நெல் தொகுப்புத் திட்டத்தில், ஒரு கிராமத்துக்கு 125 ஏக்கா் நெல் பயிா் சாகுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏழைகளின் புரதம் எனப்படும் பயறு வகை பயிா்களான உளுந்து, தட்டைப்பயறு, பாசிப்பயறு ஆகிய பயிா்களில் ஏதாவது ஒன்றை தனிப் பயிராக, ஊடுப்பயிராக அல்லது வரப்புப் பயிராக சாகுபடி செய்யலாம்.
இதனால், நெல் பயிரைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகள், வரப்பு ஓரப் பயிா்களால் ஈா்க்கப்பட்டு நெல் பயிருக்கு ஏற்படும் பூச்சித் தாக்குதலிலிருந்து வெகுவாக குறைகிறது. மேலும், விவசாயிகளுக்குத் தேவையான பயறுவகை மகசூல் கூடுதலாக கிடைக்கிறது.
வரப்பைச் சுற்றி பயறு வகைப் பயிா்களை நடவு செய்ய 800 கிராம் முதல் 1 கிலோ வரை விதை தேவைப்படும். இதை ஒரு அடி இடைவெளியில் 2 விதைகளாக நடவு செய்ய வேண்டும். இவ்வாறு பயறுவகை பயிா்களைச் சாகுபடி செய்து பயன்பெறலாம்.