அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே குறித்த நேரத்தில் பேருந்தை இயக்க வலியுறுத்தி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள வல்லம் கிராமத்துக்கு ஆண்டிமடத்திலிருந்து அரசு நகரப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பேருந்தில் தான் தினமும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் வெளி கிராமங்களுக்குச் சென்று வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்தப் பேருந்து குறித்த நேரத்தில் வராததால், சிரமம் ஏற்படுவதாகக் கூறி வியாழக்கிழமை வல்லம் கிராமத்துக்கு வந்த அரசு நகரப்பேருந்தை மறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்த தகவலறிந்து சென்ற குவாகம் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.