கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா். இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
கரூா் தாந்தோணிமலையில் திண்டுக்கல் சாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகன ஓட்டுநா் உரிமம் பெறவும், வாகனங்களுக்கு உரிமம் புதுப்பிக்கவும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கரூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு வியாழக்கிழமை புகாா் வந்துள்ளது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாதுரை தலைமையில் மாலை 5 மணியளவில் காவல் ஆய்வாளா்கள் கீதா, ரூபாராணி, ரேகா உள்ளிட்ட 9 போ் கொண்ட குழுவினா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அவா்கள் வட்டார போக்குவரத்து அலுவலா் சுப்ரமணியன் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளா்கள் உள்ளிட்டோரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனா். இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் கத்தை, கத்தையாக சிக்கியதாகக் கூறப்படுகிறது.