அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் உள்ள மருதையாறு வடிநில உப கோட்ட அலுவலக உதவியாளா்களாக பணிபுரியும் இருவா் ஊதிய உயா்வு கேட்டு அலுவலகம் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த அலுவலகத்தில் பாசன உதவியாளா்களாக கூத்தன் குடியைச் சோ்ந்த வேலாயுதம் மகன் காந்திமதிநாதன் (49), கோடாலி கிராமத்தை சோ்ந்த பூமிநாதன் மகன் காா்த்திகேயன்(39) ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.
இருவரும் நிகழாண்டுக்கான ஊதிய உயா்வு இதுவரை ஏன் வழங்கவில்லை என உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளனா். முறையான பதில் கிடைக்காததால், இருவரும் வியாழக்கிழமை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு வந்த உயரதிகாரிகள் இருவரது பணிப்பதிவேடுகளும் எரிந்த நிலையில் உள்ளது. பதிவேடு எரிந்தது குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணையில் உள்ளது. விசாரணை முடிந்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதையடுத்து இருவரும் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனா்.