அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சவாரி சென்ற வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
ஜயங்கொண்டம் அருகே தேவமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு கழுவந்தொண்டியைச் சேர்ந்த துரைராஜ், உறவினர்களை வேனில் அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
வழியில் தேவாமங்கலம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில், கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த மேகலா (29), மாலதி (29), தேவி (48), மணிகண்டன் (35), கஸ்தூரி (62), சித்ரா (25), இளவரசி (32) உள்பட 16 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, அனைவரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இளையநாதன் மகன் அஸ்வின்(5) தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தா.பழூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.