அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கொள்ளிடத்தில் புதன்கிழமை படகு கவிழ்ந்து தத்தளித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுவே மேலராமநல்லூர், கீழராமநல்லூர் என இரு கிராமங்களில் சுமார் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் விதமாக கிராமத்தின் வடக்கு பகுதியில் அழகியமணவாளன் கிராமத்தை இணைத்து உயர்மட்ட பாலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இருந்தும் அந்தக் கிராம மக்கள் தங்கள் வயல்களில் விளையும் காய்கறி பொருள்கள், கீரைகளை மறுபுறம் உள்ள தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம், பாபநாசம், கும்பகோணம் பகுதியில் சென்று விற்க, அரை கி.மீ.
தூரம் கொண்ட கொள்ளிடம் ஆற்றின் தென் பகுதியை தண்ணீர் இல்லாத நாள்களில் நடந்தே கடந்து விடுவர். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரும்போது அங்கு இயக்கப்படும் படகு மூலம் சென்று வருவர்.
இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால், அன்று முதல் அக்கிராமத்தை சேர்ந்த மக்கள், மாணவ, மாணவிகள் படகு மூலம் மேற்கண்ட நகரப்பகுதிக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை கொள்ளிடத்தின் தென் பகுதியிலிருந்து 40 பேர் ஒரு படகில் மேலராமநல்லூருக்கு சென்றனர். சிறிது தூரம் சென்ற படகு பாரம் தாங்காமல் நீரில் மூழ்கியது.
இதையடுத்து ஒருவரை ஒருவர் பிடித்தபடி 20 பேர் மேலராமநல்லூர் கரையை அடைந்து, அப்பகுதியில் இருந்த மணல் திட்டில் ஒதுங்கினர்.
தகவலறிந்த கபிஸ்தலம் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள்,பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் உடனே சென்று அவர்களைப் பத்திரமாக மீட்டனர். தகவலறிந்து சென்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி. ஜி. வினய் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் அவர்களை கிராமங்களுக்கு அனுப்பிவைத்தனர்.
தஞ்சை ஆட்சியர் பேட்டி:கபிஸ்தலம் அருகே குடிகாடு கிராமத்தில் நடந்த மீட்புப் பணிகளை பார்வையிட்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கூறுகையில், படகில் சென்ற அனைவரும் கரையேறி பத்திரமாக வந்துவிட்டனர். அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.