அரியலூர் மாவ ட்டம், மீன்சுருட்டி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை கார்-லாரி மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்; 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் மாஸ்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ஆனந்தகுமார் (30), இவரது நண்பர் அனில்குமார் (26). அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர்கள், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு புதன்கிழமை இரவு காரில் புறப்பட்டனர். இவர்களுடன் அந்நிறுவன ஊழியர்களும் உறவினர்களுமான நாகேந்திரன் (28), நந்தகுமார்(24) ஸ்ரீகாந்த் (27), ரவிக்குமார்(30), கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணப் பள்ளியைச் சேர்ந்த விஜயகாந்த் (28) ஆகியோரும் வந்தனர். வியாழக்கிழமை காலை திருநள்ளாறில் தரிசனத்தை முடித்துவிட்டு பகலில் ஓய்வெடுத்த அவர்கள் நள்ளிரவு ஊருக்குப் புறப்பட்டனர். காரை ஆனந்தகுமார் ஓட்டினார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள அணைக்கரை தழுதாழைமேடு பகுதியைக் கடந்த காரும் எதிரே வந்த லாரியும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் இருந்த ஆனந்தகுமார், அனில்குமார்,நாகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற நால்வர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த மீன்சுருட்டி போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் காரினுள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 4 பேரையும், உயிரிழந்தவர்களின் சடலங்களையும் கொட்டும் மழையிலும் மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்துக் குறித்து வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் கடலூர் நங்குடி கிராமத்தைச் சேர்ந்த காந்தியை (40) கைது செய்து விசாரிக்கின்றனர்.