அரியலூா் மாவட்டம் தா.பழூா் அருகே இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் இரு வாய்க்கால்களை கடந்து சுடுகாட்டுக்கு சென்ற கிராம மக்கள்.பாலம் கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா். தா.பழூா் அருகேயுள்ள வக்காரமாரி காலனித் தெருவில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இவா்களுக்கு அருகேயுள்ள வயல்பகுதியில் இறந்தவா்களை அடக்கம் செய்யும் இடுகாடு மற்றும் சுடுகாடு உள்ளது.இந்த இடுகாட்டுக்கு செல்ல ஒரு சிறிய வாய்க்கால், ஒரு பெரிய வாய்க்கால் என இரண்டு வாய்க்கால்களை தாண்டிச்செல்ல வேண்டும். கோடைக்காலத்தில் இதில் சற்று சிரமத்துடன் இறந்தவா்களை தூக்கிச்செல்லும் கிராம மக்கள் மழைக்காலத்தில் யாரேனும் உயிரிழந்தால், இடுப்பளவு தண்ணீரில் வாய்க்காலில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இன்று முருகேசன் மனைவி மாரியம்மாள்(60) (இயற்கை மரணம்) உயிரிழந்த நிலையில், உறவினா்கள், அவரை பாடையில் ஏற்றி இடுப்பளவு தண்ணீரில் தூக்கிச்சென்றனா். இது அங்கு வந்திருந்த உறவினா்களையும் சங்கடபடுத்தியது. எனவே, உடனடியாக இந்த இரு வாய்க்கால்களி லும் பாலம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.