அரியலூர் மாவட்டம், அரியலூர்,திருமானூர்,தா.பழூர்,ஜயங்கொண்டம்,ஆண்டிமடம்,செந்துறை ஆகிய 6 ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 880 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.
அரியலூர், திருமானூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் முன்னிலை வகித்தார். அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு தாம்பூலத்தட்டு, ஜாக்கெட் துணி, பழம், பூ, வெற்றிலைப்பாக்கு, வளையல்கள் அடங்கிய பொருள்களை வழங்கினார்.
அதேபோல, ஜயங்கொண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ.,ஜெ.கே.என். ராமஜெயலிங்கமும், செந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குன்னம் எம்எல்ஏ., ஆர்.டி.ராமசந்திரனும் கர்ப்பிணிகளுக்கு தாம்பூலத்தட்டு வழங்கினர். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு 5 வகையான சாப்பாடுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் என். சாவித்திரி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலர் அருணா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் சி. ஹேமசந்த்காந்தி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.