அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருமான எ.சரவணவேல்ராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகள், அதேபோல் செந்துறை வட்டத்துக்கு உள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள், காவனூர்
கிராமம், இச்சிலேடி ஏரியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.9 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள், தத்தனூர் பொன்னப்பன் ஏரியில் ரூ.3.36 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள், கரைகள் பலப்படுத்தும் பணிகளை பார்வைவிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் ஜயங்கொண்டம் அருகே குருவலப்பர் கோயில் கிராமத்திலுள்ள பொன்னேரியில் ரூ.20 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள், பொன்பரப்பி கிராமத்தில் பிரதம மந்திரி கனிம துறை நல திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் சுகாதாரத்துணை நிலையம் மற்றும் குடியிருப்பு பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், உதவிசெயற்பொறியாளர் சாந்தி, அரியலூர் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.