புரட்டாசி 2ஆவது சனிக்கிழமையையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை காண மக்கள் கூட்டம் அலைமோதியது.
அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை சுப்ரபாத சேவை, விஷ்வரூப தரிசனம் ஆகியவற்றிற்கு பின் பெருமாள், தாயார் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. துளசி அர்ச்சனை, அலங்கார தீப வழிபாடு, மந்திர உபச்சார பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் அரியலூர் கோதண்டராம கோயில் மற்றும் திருமானூர், திருமழபாடி, தா.பழூர், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன.