அரியலூர் மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா - தமிழ்நாடு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், கடந்த ஓராண்டில் (2018-19) 5,442 பேர் பயனடைந்துள்ளனர் என்றார் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், சுகாதாரத் துறையின் சார்பில், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் பயனடைந்த பயனாளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு பொருள்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியது:
தமிழக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்துடன் இணைந்து, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1,451 சிகிச்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 241 அரசு மருத்துவமனைகள் மற்றும் 717 தனியார் மருத்துவமனைகளில் எந்தவொரு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 5,442 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 65 லட்சம் மதிப்பில் உயர்தர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் முன்னிலை வகித்தார். ஜயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.கே.என். இராமஜெயலிங்கம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வீ.சி. ஹேமசந்த் காந்தி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், கடுகூர் வட்டார மருத்துவ அலுவலர் ம.அனிதா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள் கலந்துகொண்டனர்.