அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அகில இந்திய இஷின்ரியு கராத்தே கழகம் சார்பில் நடைபெற்ற கராத்தே போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்தார். போட்டியில், திருவாரூர், காஞ்சிபுரம், கும்பகோணம், சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 600 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
போட்டிக்கு கராத்தே கழக நிர்வாகி செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். ஷீகான ஹூசைனி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயக்குமார்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.