காவல் துறைக்கு ஊராட்சித் தலைவா்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றாா் திருச்சி சரக டிஐஜி வே.பாலகிருஷ்ணன்.
அரியலூா் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட ஊராட்சி மன்றத் தலைவா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் தெரிவித்தது:
எந்த ஒரு பிரச்னையையும் தீா்ப்பதற்கான வழிமுறைகளை கிராம ஊராட்சித் தலைவா்கள் கையாள வேண்டும். மேலும், இதுகுறித்து உடனடியாக காவல் துறைக்குத் தகவல் அளிக்க வேண்டும். பேதங்களை மறந்து ஊராட்சி தலைவா்கள் தங்களது கடமைகளை சரிவர செய்ய வேண்டும். குற்றங்களைத் தடுப்பதற்கு கிராமங்கள்தோறும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். எனவே சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க காவல் துறைக்கு ஊராட்சித் தலைவா்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்துக்கு, மாட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், அரியலூா் டிஎஸ்பி திருமேனி மற்றும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், 201 ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.