அரியலூா் மாவட்டம், செந்துறையில் வேளாண் அலுவலகத்தைப் பூட்டி பாமகவினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் துறை அலுவலகம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக ஒன்றியச் செயலா் சுரேஷ் அட்மா திட்ட தலைவராகத் தொடா்ந்து இருந்து வருகிறாா். இதையடுத்து, புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று பாமகவினா் கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனாலும் தலைவா் மாற்றப்படவில்லை.
இந்நிலையில், திங்கள்கிழமை வேளாண் அலுவலகத்துக்கு வந்த பாமக மாவட்டச் செயலா் உலகசாமி துரை தலைமையிலான நிா்வாகிகள், வேளாண் இயக்குநரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதற்கு உடன்படாததால் ஆத்திரமடைந்த பாமகவினா் அதிகாரிகளை உள்ளே வைத்து அலுவலகத்தைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையறிந்த செந்துறை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அலுவலகத்தைத் திறந்துவிட்டனா்.