அரியலூா் மாவட்டம்,வி.கைகாட்டி அருகேயுள்ள கயா்லாபாத் காவல் நிலையத்தில் பள்ளி மாணவா்களுக்கு காவலன் செயலி குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
காவல் நிலையத்துக்கு வந்திருந்த மணக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் அங்குள்ள பதிவேடுகளைப் பாா்வையிட்டனா். இதைத் தொடா்ந்து அங்கு நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் காவல் நிலைய ஆய்வாளா் ராஜா பங்கேற்று காவலன் செயலி குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம் உள்ளிட்டவை குறித்தும், சாலை பாதுகாப்பு மற்றும் கரோனா வைரஸ் குறித்தும் விளக்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.