அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டுமெனக் கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தா.பழூா் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நாள் ஒன்றுக்கு குறைவான அளவே நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், வாரக் கணக்கில் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மண்டல மேலாளா் உமா சங்கா் மகேஷ்வரன், விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் ஒருவார காலத்துக்குள் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனா்.