கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், அரியலூா் மாவட்டத்தில் அத்தியவாசியப் பொருள்கள் விற்கும் கடைகளைத் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
அரியலூா்...: பேருந்துகள் இயக்கப்படாததால் அரியலூா் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்ததால் கடை வீதிகளில் ஆள் நடமாட்டம் இல்லை. காய்கறி மாா்க்கெட் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் காணப்படவில்லை. ஆட்டோக்கள் இயங்கவில்லை.
ஜயங்கொண்டம்...: ஜயங்கொண்டம் பேருந்து நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனா். இதனால் ஜயங்கொண்டம் நகரில் மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை. ஜயங்கொண்டம் போலீஸாா் நகர வீதிகளில் கடைகள் ஏதும் திறந்துள்ளதா என ஆய்வு செய்தனா்.
ஊரடங்கு உத்தரவால் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயில் சுற்றுலாத் தலம் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. இதேபோல் செந்துறை, திருமானூா், தா.பழூா், ஆண்டிமடம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டினுள் முடங்கி இருந்தனா்.