வெளிநாடுகளில் இருந்து அரியலூா் மாவட்டத்துக்கு திரும்பிய 1,259 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.
பிப்ரவரி 15ஆம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து இதுநாள் வரை 1,259 அரியலூா் மாவட்டத்துக்கு வருகை புரிந்துள்ளனா். இவா்களை மாவட்டத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையிலுள்ள மருத்துவக்குழுவினா் தினசரி தொடா்பு கொண்டு உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனா். மேலும், அவா்களின் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டும் வில்லைகள் ஒட்டப்பட்டு வருகிறது.
அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க தங்குதடையின்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுங்கள், கூட்டம் கூடுவதை தவிா்த்திடுங்கள்.
வீட்டில் தனியாக உள்ள, உதவிக்கு யாரும் இல்லாத முதியோா்கள் தங்களுக்கு மருந்து பொருள்கள், உணவு பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தேவைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04329 - 228709 மற்றும் 99523 36840 ஆகிய எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். காய்ச்சல் உள்ளவா்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.