அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே மற்றொரு சாதியினரின் சுடுகாட்டில் சலூன் கடை உரிமையாளரின் சடலத்தை எரியூட்ட எடுக்கப்பட்ட முயற்சியை வேறு சாதியினர் தடுத்து நிறுத்தினர். இதன் விடியோ பதிவு கட்ச்செவியில் வைரலாக பரவி வருகிறது.
திருமானூர் அருகேயுள்ள திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன் மகன் கற்பககுமார்(22). தஞ்சாவூர் அருகேயுள்ள பள்ளி அக்ஹாரகரத்தில் சலூன் கடை வைத்துள்ளார். கடந்த 6 ஆம் தேதி இவர், தனது கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, கள்ளியூர் என்ற இடத்தில் லாரி மோதி காயமடைந்து, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவர் அங்கு கிசிச்சை பலனின்றி, கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். 9 ஆம் தேதி உடல் கூறு பரிசோதனைக்கு பிறகு கற்பககுமாரின சடலத்தை பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர், இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சுடுகாட்டில் எரியூட்டுவதற்கான கொட்டகை வசதி இல்லாததால் மற்றொரு சாதியினரின் சுடுகாட்டுக்கு சடலத்தை கொண்டுச் சென்றனர்.
அங்கு சடலத்தை எரியூட்டுவதற்காக தயார் நிலையில் இருந்த போது, தகவலறிந்து வந்த அந்த சுடுகாட்டுக்குரிய சாதியினர், எங்களது சுடுகாட்டில் எரியூட்ட கூடாது என்றும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாட்டில் எரியூட்ட வேண்டும் என்று கூறி தடுத்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் காவல்துறையினர், இரு தரப்பினரிடம் சமதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், அந்தந்த சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாட்டில் சடலத்தை எரியூட்ட வேண்டும், தேவையில்லாமல் பிரச்னையில் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறையினர் கூறியதையடுத்து, அதன் பிறகு அவர்களது சுடுகாட்டில் கற்பககுமாரின் சடலம் எறியூட்டப்பட்டது.
இது குறித்து,கற்பககுமாரின் தாய் அம்சவள்ளி கூறுகையில், எங்களது சுடுகாட்டில் எரியூட்டுவதற்காக கொட்டகை கிடையாது. எனது மகன் விபத்தில் உயிரிழந்ததால் தான், சடலத்தை எரியூட்டுவதற்காக மற்றொரு சாதியினருக்கு உரிய சுடுகாட்டுக்கு கொண்டு சென்றோம். அங்கு அந்த சாதியினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் காவல்துறையினர் வந்து கூறியதையடுத்து எனது மகனின் சடலத்தை, எங்களுக்குரிய சுடுகாட்டில் திறந்த வெளியில் எரியூட்டப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சுடுகாட்டில் சலூன் கடை உரிமையாளரின் சடலத்தை எரிக்க மற்றொரு சாதியினர் தடுத்துள்ளதாக தவறான விடியோ பதிவு கட்ச்செவியில் வைரலாக பரவி வருகிறது.