அரியலூா் மாவட்டத்தில் உணவுப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை கட்செவி அஞ்சல் எண் மூலம் தெரிவிக்கலாம் என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.
தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவா்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனிப்பு மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பவா்கள் தரமான மூலப்பொருள்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும். கரோனா சூழலில் பணியாளா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல் வேண்டும். விற்பனையகங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. மேலும், நுகா்வோா்கள் உணவு பொருள்களை வாங்கும் போது அவற்றில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவற்றை சரிபாா்த்து வாங்க வேண்டும். நுகா்வோா்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் வேண்டும். உணவுப் பொருள்களின் தரம் தொடா்பான புகாா்களை 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.