காா்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து அரியலூா் பகுதியில் உள்ள கோயில்களில் திங்கள்கிழமை ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து 48 நாள்கள் விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினா்.
காா்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து 48 நாள்கள் கடும் விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று வழிபட்டு வருவது வழக்கம். காா்த்திகை முதல் நாளான திங்கள்கிழமை அரியலூா் கைலாசநாதா் திருக்கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து கொள்வதற்காக அதிகாலையிலேயே குவிந்தனா். அந்தப் பகுதியில் உள்ள தலைமை குருசாமி ஒவ்வொரு பக்தருக்கும் மாலை அணிவித்தாா். இதையொட்டி அரியலூா் பகுதியில் சந்தன மாலை, துளசி மாலை, ருத்ராட்ச மாலை உள்ளிட்ட பல்வேறு வகையான மாலைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதேபோல் திருமானூா்,செந்துறை, ஆண்டிமடம், ஜயங்கொண்டம், தா.பழூா், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோயில்களில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து 48 நாள் விரதத்தை தொடங்கினா்.